OurUmmah.org

One World One Ummah

இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்! – Part 1

with one comment

hijab2

அபூ ரிஸ்வான்:

‘நாடு என்பது நாடா வளத்தைப் பெற்றிருக்க வேண்டும்’ என்பது ஆன்றோர் மொழி! இம்முதுமொழி நம் இந்தியத்திருநாட்டில் உலாவந்தாலும் மற்றுமுள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். ஒரு நாடு பெற்றிருக்க வேண்டிய வளங்களை பட்டியல் இட்டாலும் அது நீளும். அதில் முக்கியமானவைகளை மட்டும் கூறினால் – மனிதவளம், இயற்கைவளம், தொழில்வளம், அறிவுவளம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் மனிதவளம் என்பது தலையான ஒன்று.

இன்று நம் அண்டை நாடான சீனா மற்றும் நாம் வாழும் இந்தியா இவையிரண்டும் மனித வளத்தில் உலகிலேயே முதல், இரண்டாம் இடத்தில் உள்ளன. இதுவே இவ்விரு நாடுகளும் வேகமாக வளர்ச்சியடைவதற்கு காரணமாக உள்ளது.

ஆனால் உலகிலேயே நாகரீகத்தின் உச்சியில்(?) இருந்து கொண்டிருக்கிறோம் என்று பெருமைபட்டுக் கொள்ளும் மேற்கத்திய உலகில் இம்மனிதவளம் மிகவும் குன்றிய நிலையிலேயே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய 31 நாடுகள் அடங்கிய ஐரோப்பா கண்டத்தை எடுத்துக் கொண்டால் அதன் சராசரி மொத்த கருவுறுந்தன்மை விகிதம் (Total Fertility Rate) ஒரு பெண்ணுக்கு 1.38 குழந்தைகள் தான்!

இனி மொத்த கருவுறுந்தன்மை விகிதம் (Total Fertility Rate) என்றால் என்னவென்பதை சற்று விரிவாகப் பார்ப்போம். ஒரு ஊரில் குழந்தை பெறும் வயதுடைய பெண்கள் (15 வயதிலிருந்து 44 வயது வரை) 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் 100 பேரும் பெற்றெடுத்த மொத்தக் குழந்தைகள் 200 என்றால் இவ்வூரின் மொத்தக் கருவுறுந்தன்மை விகிதம் இரண்டு (2) குழந்தைகள் ஆகும். அதாவது சராசரியாக ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் ஆகும். சில பெண்களுக்கு குழந்தையே இல்லாமல் இருக்கலாம்! மேலும் சிலர் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளைக் கூட பெற்றிருக்கலாம். இந்தக் கணக்குப்படி 100 பெண்களும் பெற்றெடுத்த மொத்தக் குழந்தைகள் இந்த ஆண்டில் எவ்வளவு உள்ளது என்பது தான்!

கருவுறுந்தன்மையைப் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானிகள் ஒரு மிகப்பெரும் விஞ்ஞான உண்மையைக் கண்டறிந்திருக்கிறார்கள். இதன்படி ஒரு சமுதாயம் (அல்லது ஒரு நாடு) நிலைத்திருக்க வேண்டுமெனில் அந்தச் சமுதாயத்தில் (அந்நாட்டில்) உள்ள பெண்களின் கருவுறுந்தன்மை விகிதம் (Total Fertility Rate) ஒரு பெண்ணிற்கு 2.11 குழந்தைகள் அல்லது அதற்கு மேலும் இருக்க வேண்டும். அதற்கு குறைவான கருவுறுந்தன்மை விகிதம் தொடர்ச்சியாக இருக்குமேயானால் காலப் போக்கில் அந்நாட்டின் மக்கட்தொகை படிப்படியாகக் குறைந்து முடிவில் அழிந்துவிடும்.

மேலும் இந்தப் பெண்களின் கருவுறுந்தன்மை விகிதம் 1.9 குழந்தைகள் என இருக்கும் நாட்டில் அதை சரிசெய்து கருவுறுந்தன்மையைக் கூடுதலாக்குவது என்பது மிகவும் கடினமான காரியமாகும். ஆனால் கருவுறுந்தன்மை விகிதம் 1.3 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள நாட்டில் அதை சரிசெய்து கூட்டுவதற்கு 80 முதல் 100 ஆண்டுகள் வரை கூட ஆகலாம். ஆனால் அவ்வளவு நீண்ட காலத்திற்கு மக்கள் பற்றாக் குறைவால் அந்நாடு மிகவும் பாதிப்புக்குள்ளாகி அழிவின் விழம்பிற்கே சென்றுவிடும். அச்சமுதாயத்தை காப்பாற்ற யாராலும் முடியாது- இறைவன் ஒருவனைத் தவிர!

பெண்களின் கருவுறுந்தன்மை நாட்டுக்கு நாடு வேறுபடும். வைக்கிபீடியா (Vikipedia) என்னும் வலைத்தளத்தின் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் பெண்கள் கருவுறுந்தன்மை விகிதங்களில் முக்கியமான ஐரோப்பிய நாடுகளின் விகிதமும், மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளின் விகிதமும், மேலும் சில ஆசிய நாடுகளின் விகிதங்களையும் கீழே உள்ள பட்டியலில் தந்துள்ளேன்.

Fertility Rates

இவ்வட்டவனையை சற்று உற்று நோக்கும் போது ஐரோப்பிய நாடுகளின் பெண் கருவுறுந்தன்மை விகிதம், விஞ்ஞானிகள் கூறியுள்ள குறைந்தபட்ச அளவான – ஒரு பெண்ணுக்கு 2.11 குழந்தைகளை விட மிகவும் குறைந்ததாகவே உள்ளது. ஆகையால் இன்னும் 50 அல்லது 100 வருடங்களில் மனித சஞ்சாரமே இல்லாத காடுகளாகத் தான் மாறிவிடுமா இந்நாடுகள்? இல்லை! அப்படி ஆகிவிடாது என்கின்றனர் சமூகவியலாளர்கள் (Social Scientists).

மனித வளம் குன்றிய, அதாவது பெண் கருவுறுந்தன்மை 2.11 குழந்தைகளுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு நாடும் சில சட்டங்களை இயற்றி, சில திட்டங்களைத் தீட்டி, அதிகமாகக் குழந்தைகளைப் பெறும் குடும்பங்களுக்கு பல சலுகைகளை வழங்கி மனித வளத்தை ஒரு சிறிய அளவாவது பெருக்கிக் கொள்ள முயல்கின்றன. சில நாடுகளில் மூன்று அல்லது அதற்கு அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினர்களுக்கு வருமான வரிச்சலுகை, குழந்தைக் கல்வி, வளர்ப்புக்கு நிதியுதவி மேலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்றவைகளை அளித்து அவர்களை ஊக்குவிக்கின்றன. ஆனால் இவையெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாகத் தான் போய்விடுகின்றன். இச்சலுகைகளால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை!

மேற்கூறிய மனிதவளம் பெருக்குந்திட்டம் போதிய பலன் தராததால், சில நாடுகள் பிரிதொரு முயற்சியில் இறங்கியுள்ளன. அதுதான் வெளிநாட்டிலிருந்து குடியேற்றுதல்! இக்குடியேற்றத்திற்குப் பல நிபந்தனைகளை விதித்து ஒவ்வொரு நாடும் கட்டுப்படுத்துகின்றது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு யார் வேண்டுமானாலும் குடியேறிவிட முடியாது. “Brain Gain” என்று ஆங்கிலத்தில் கூறக்கூடிய ‘மூளை மிகிதப்படுத்துல்’ என்ற கொள்கையை வலுவாகப் பற்றிப்பிடித்து அதை முழுமையாக நடைமுறைப்படுத்துகின்றன. இக்கொள்கையின்படி ஐரோப்பிய நாடுகளுக்கும், மேலும் அமெரிக்க நாடுகளுக்கும் மேற்படிப்பிற்காகச் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை போன்றவைகளை வழங்கி அவர்களின் மேற்படிப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு தகுந்த வேலையையும் வழங்கி சில ஆண்டுகள் அங்கு தங்கியிருந்த பின்பு குடியுரிமையும் வழங்குகின்றார்கள். மேலும் மிக அதிக பொருளாதார வளம் உள்ளவர்களுக்கு தன் நாட்டில் தொழில் மற்றும் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கி அவர்களுக்கு குடியுரிமையும் வழங்குகின்றன. சரி, இவைகளால் மனிதவளத்தை அதிகரிக்க முடிகின்றதா என்றால் இல்லை என்றே கூறலாம்!

இவ்விரண்டு திட்டங்களையும் அன்றி வேறொரு வகையிலும் குடியேற்றம் மிகுதியாய் நடைபெறுகிறது. அதுவே உறவினர்கள், இரத்தபந்தங்களை குடியேற அனுமதிப்பது. இவ்வகையில் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் மிகவும் அதிகம். இப்படி குடியேறிய முஸ்லிம்களின் குடும்பத்தில் பிறப்பு விகிதம் அங்கு வசிக்கும் மாற்று மதத்தினரைவிட அதிகமாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பிறப்பு விகிதம் (Birth Rate) குறைவாக ஆனதற்குரிய காரணங்களை ஆராய்வோம். இரண்டாம் உலகப்போருக்கு முன்புவரை கிழகத்திய நாடுகளில் இருப்பதைப் போன்றே ஆண்-பெண் ஒருக்கங்கள், மணவாழ்க்கை, குழந்தை பிறப்பு எல்லாம் சராசரியாக ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தன. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட இராணுவ வீரர்களிலும் மற்றும் குண்டு வீச்சு, நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சாராரண மக்களுமாகச் சேர்ந்து மொத்தம் 120 மில்லியன் மக்கள் (73+43=120) இறந்தனர். (ஆதாரம் : வைக்கிபீடியா – World War Casualities).

இப்படி இறந்த மக்களில் ஆண்களே மிகப்பெரும்பாண்மையினர். கணவனை இழந்து இளம் பெண்களும், நடுத்தரவயது பெண்களும் விதவைகளாக்கப்பட்டனர். மேலும் விதவைகளாக்கப்பட்ட மில்லியன் கணக்கான பெண்களுக்கு மறுமணம் செய்யவோ அல்லது மறுவாழ்வு பெறவோ முடியவில்லை. காரணம், போர் முடிந்து வீடுகளுக்குத் திரும்பி வந்த ஆண்கள் மிகக் குறைவானவர்களே! வேறு திருமணம் மூலம் மறுவாழ்வு கிடைக்காதுபோன இளம் பெண்களால் சமூகத்தின் கட்டுக்கோப்புக் குலைந்து ஒழுக்கமின்மை தலைதூக்கியது. ஆண்களுக்கு ஒரு மனைவி வீட்டிலும், பல பெண்கள் வெளியில் உல்லாசத்திற்கும் கிடைத்தார்கள். இதுபோன்ற ஒழுக்கக் கேடுகள் ஒரு பெரிய தீமையாகவே கருதப்படவில்லை! நாட்டில் உள்ள ஆட்சியாளர்களும் இத்தீமைகளை கண்டும் காணாமல் விட்டுவிட்டனர். இச்சமூக ஒழுக்கமின்மை எந்த அளவுக்கு மலிந்துக் காணப்பட்டதென்றால், வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, ஐரோப்பாவில் கணவனை இழந்து தனியே வாழ்ந்த இளம் பெண்களின் வீட்டு வாசல்களில் ஒரு பலகைத் தொங்கும். அதில் – ‘இவ்வீட்டில் இரவு தங்கும் ஆண்களுக்கு உல்லாசம் இலவசம்’ என்று எழுதப்பட்டிருக்கும். அதன் பொருள் என்னவென்றால், அவ்வீட்டில் உள்ள அறைகளில் பணம் கொடுத்து இரவைக் கழிக்கும் ஆண்களுக்கு அவ்வீட்டுப் பெண்கள் இலவசமாக உடல் இன்பம் அளிப்பார்கள் என்பது தான்.

இத்தகைய ஒழுக்கக் கேட்டை வாழ்க்கை முறையாக எடுத்துக் கொண்ட பல மில்லியன் ஐரோப்பிய பெண்கள் – மேலும் மேலும் கெட்டு அதள பாதாளத்திற்றுச் சென்றார்கள். திருமணம், குழந்தைப் பேறு இவைகள் எல்லாம் பழங்கால பழக்கவழக்கங்கள்! – எனவே இவைகளில் நாம் இனி ஈடுபடத் தேவையில்லை! என்று ஒரு கூட்டம்! ‘பெண் விடுதலை’ (women liberation) என்ற கோஷத்தைப் போட்டுக் கொண்டு திருமணம் என்ற பந்தம் இல்லாமலேயே வயது வந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத்தலைப்பட்டனர். இப்படிப்பட்ட தகாத உறவுகளில் குழந்தைகள் என்பது ஒரு சுமையாகவே கருதப்படுகிறது!. அப்படி கருவுறும் பெண்ணும் தன் கருவை கலைத்து விடுகிறாள்.

மேலும் மிகவும் இளம் பருவத்திலேயே இளைஞர்களும், இளைஞிகளும் பாலியல் உறவுகொள்ள ஆரம்பித்துவிடுகின்றனர். சில புள்ளிவிபரங்களின்படி 15 வயதைத் தாண்டுவதற்கு முன்பே மேற்கத்திய நாடுகளில் ஆண்களும், பெண்களும் பாலியல் உறவு கொள்கிறார்கள். இத்தைகைய முறைகேடுகளால் ஆண்களுக்கு விந்துஅணு (Sperm count) எண்ணிக்கை குறைவும், பெண்களுக்கு கருமுட்டை (egg) உற்பத்திக் குறைவும் ஏற்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

இத்தகைய பல காரணங்களால் மேற்குலகின் நாடுகளில் பலவற்றில் பெண் கருவுறுந்தன்மை மிகக்குறைவாகவே கருதப்படுகின்றது. அல்லாஹ் மனித குலத்தின் வாழ்விற்கு ஏற்படுத்திய இயற்கை வாழ்க்கை முறையை நிராகரித்து மனிதக் கற்பனையில் தோன்றிய அனைத்து ஒழுகேடுகளையும் சுதந்திரம் என்ற மூடத்தத்துவத்தால் சரி என்று ஏற்றுக் கொண்டமையால் இந்நாடுகளின் – இச்சமுதாயங்களின் அழிவை யாராலும் தடுக்க முடியாது.எச்சமுதாயம் படைத்த இறைவனை ஏற்றுக் கொண்டு, அவனது கட்டளைகளுக்கு கீழ்படியவில்லையோ அச்சமுதாயம் இவ்வுலகத்தை விட்டும் அழித்தொழிக்கப்படும் என்பது நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது.

ஏக இறைவனை நிராகரித்த முற்கால சமுதாயங்களை இறைவன் பலவகையான பேரழிவைக் கொண்டு அழித்து நம்பிக்கைக் கொண்டவர்களை மட்டும் காப்பாற்றினான். நிராகரித்த சமுதாயங்களில் சிலதை பெருவெள்ளம் மூலமும், சூரைக் காற்று மூலமும், சிலதை நெருப்புக்கற்களால் ஆன மழையைக் கொண்டும், சிலதை மிகப் பெரிய சத்தத்தின் மூலமாகவும் அழித்து ஒழித்தான் இறைவன். ஆனால் தற்காலத்தில் நாகரீகத்தின் உச்சியில் இருக்கும் மனிதன் இப்படிப்பட்ட இயற்கைச் சீற்றங்களுக்கு ஆட்படாமல் தற்காத்துக் கொள்ள பல வகைகளில் ஆற்றல் பெற்றவனாக உள்ளான். ஆகவே பேரறிவாளாகிய அல்லாஹ் (சுப்), வெளியிலிருந்து தன்னை நிராகரித்தவனுக்கு அழிவைக் கொண்டுவராமல், அவனைத் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்படி அமைத்து விட்டான்.

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் அல்லாஹ்வேயாவான்’ (அல்-குர்ஆன் 3:54)

இன்றைக்கு மேற்குலகத்தின், குறிப்பாக ஐரோப்பாவில் வசிக்கும் நிராகரிக்கும் சமுதாயம் மனிதவளக் குறைவால் – அதை பெருக்குவதற்கு அவர்கள் – செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததன் விளைவால் – தன்னைத் தானே அழித்துக் கொண்டு வருகிறது என்ற பேருண்மை வியப்பைத் தருகிறது அல்லவா?

Written by poralikall

September 1, 2009 at 4:45 pm

One Response

Subscribe to comments with RSS.

  1. அஸ்ஸலாமு அலைக்கும்! சமிபகாலமாக என்னை வெகுவாக ஈர்த்த வலை தளம் இது. எழுத்து மக்களை வடிக்கும் கருவி. அதனை மிக சரியாக பயன்படுத்தினால் தீயதை அறுக்கும் கூர் கருவிகளாக நன் மக்கள் கிடைப்பார்கள் .
    அந்த என்னை பணியிலும் என்னை இணைக்கு மாறு சகோதர அன்புடன் கேட்கிறேன். என்னுடைய செய்திகளை எவ்வாறு இதில் பதிப்பது என்பதை தாழ்மையோடு கேட்கிறேன் .

    – அபூ முஹம்மத்

    அபூ முஹம்மத்

    May 3, 2011 at 3:30 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 34 other followers